ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் மழை நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த மண் எடுக்கப்பட்டு சாலை ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டது.
பல மாதங்கள் ஆகியும் அந்த மண்குவியலை நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் உள்ளது. இதனால் முக்கோணம் பகுதியிலிருந்து புது நகர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் இந்த மண் குவியல்கள் உள்ளது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.