Tuesday, May 21, 2024
Home » உடல் பருமனை குறைப்பதற்கான சிகிச்சையில் வாலிபர் பலி: தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை விசாரணை

உடல் பருமனை குறைப்பதற்கான சிகிச்சையில் வாலிபர் பலி: தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை விசாரணை

by Neethimaan

பல்லாவரம்: யூடியூப் விளம்பரத்தை பார்த்து உடல் பருமனை குறைக்க சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பிரபல தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருவள்ளுவர் நகர், புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகன் ஹேமச்சந்திரன் (26), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 150 கிலோ எடையுடைய ஹேமச்சந்திரன் உடல் பருமன் காரணமாக நாளுக்குநாள் அவதியுற்று வந்துள்ளார். இதனிடையே, யூடியூப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக, பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை அணுகினார்.

அந்த, மருத்துவமனையில் உடல் பருமனை குறைப்பதற்காக, கடந்த 22ம் தேதி ஹேமச்சந்திரனுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, ஹேமச்சந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமச்சந்திரனின் பெற்றோர், பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக இறந்ததாக கூறி, பம்மல் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து தமிழ்நாடு முதல்வரிடமும் புகார் அளித்தனர்.

அதன்பேரில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் நேற்று முன்தினம் சென்னை மருத்துவத்துறை இணை இயக்குநர் தீர்த்தலிங்கம் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், பம்மலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியில் இருந்த செவிலியர்களிடம், ஹேமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை விரைவில் முதல்வரிடம் அளிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

fourteen + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi