Tuesday, May 21, 2024
Home » கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்

by Neethimaan


சென்னை: ரயில்வேக்கு இதுவரை பெட்டிகள் கிடைக்காததால், புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர காலதாமதமாகும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் பிரதான போக்குவரத்தாக புறநகர் ரயில்கள் இருக்கின்றன. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – காஞ்சிபுரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி (தற்போது சிந்தாதிரிபேட்டை வரை இயக்கம்), சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தெற்கு ரயில்வே புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவையை பல்லாயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் இணைக்கப்படும், என தெற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாததால், மாநில அரசு ஏசி ரயில்களை இயக்க முடிவு செய்து, மாநில பட்ஜெட்டில் அவற்றைச் சேர்த்தது, அதே நேரத்தில் சாத்தியக்கூறு ஆய்வை நடத்த மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் புறநகர் வழித்தடங்களில் ஏசி ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் தயாராக உள்ளது. ஆனால், பெட்டிகள் தயாராக இருக்கும் போது மட்டுமே அவற்றை அறிமுகப்படுத்த முடியும்.

ஐசிஎப் தான் இந்த திட்டத்திற்கான பெட்டிகளை தயாரிக்க வேண்டும். கடந்த நவம்பர் முதல் மும்பை புறநகர் ரயில்களுக்காக தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏசி புறநகர் ரயில்களை ஐசிஎப் தயாரித்து வருகிறது. சென்னைக்கான ஏசி பெட்டிகளை ரயில்வே வாரியம் ஒதுக்க வேண்டும். 2022ம் ஆண்டு சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி ரயில்களை இயக்க ரயில்வேயுடன் ஒத்துழைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்திருந்தது. நிதி, வருவாய் பகிர்வு, செயல்பாடு மற்றும் பிற விவரங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒன்று அல்லது 2 ஏசி பெட்டிகளை வைத்திருப்பது சாத்தியமில்லை. ரயில் முழுவதும் குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் செலவு அதிகரிக்கும். எனவே, இத்திட்டம் செயல்படுத்த காலதாமதம் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

18 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi