செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே வடிவேலு பட பாணியில் குளத்தை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் நேற்று பொதுமக்கள் புகார் அளித்தனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மங்களம் ஊராட்சியில் சர்வே எண் 158ல் ஆத்திக்குளம் இருந்து வந்ததாகவும், இந்த குளத்தினை தற்போது காணவில்லை என அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதனால், ஒரு கணம் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். மேலும், மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்டு தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ள குளத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.