சென்னை, ஜூன் 13: அம்பத்தூரில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்நிலையில், அம்பத்தூர் அருகேயுள்ள அரசு உதவி பெறும் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
அம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகள் சென்னை கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே அம்பத்தூரில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கான உரிய சாத்திய கூறுகள் ஆராயப்படும். 8 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இல்லை என்றால் கண்டிப்பாக அங்கு கொண்டுவரப்படும். போதிய இட வசதி இல்லையென்றாலும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அம்பத்தூர் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டுவரப்படும்.
அரசு பள்ளியாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாமே கிடைக்கும் என்ற வகையில் தமிழக அரசு பள்ளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 25 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக மேலும் 5 சதவீதம் கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல விவசாய வளர்ச்சிக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார். இதே நன்னாளில் வளர்ச்சி அடைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பள்ளிகளை நேற்று திறந்துள்ளோம். முதலமைச்சர் கல்வியையும், மருத்துவத்தையும் தனது இரு கண்களாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.