புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலையை மட்டுமே செய்கிறார். பிரித்தாளும், பிரிவினையை ஏற்படுத்தும் பிரச்னைகளை எழுப்ப கூடுதல் நேரத்தை செலவிடுகிறார். மணிப்பூர் பற்றி எரிகிறது, இந்திய எல்லையை சீனா அபகரிக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்துகிறார்.
பிரதமர் மோடி அரசால் நியமிக்கப்பட்ட 21வது சட்ட கமிஷன், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை நன்கு மதிப்பாய்வு செய்ததில் இப்போதைக்கு ஒரே மாதிரியான சட்டம் தேவை இல்லை என கருத்து தெரிவித்தது. அப்படி இருக்கையில், 22வது சட்ட கமிஷன் மீண்டும் இந்த விவகாரத்தில் மக்கள் கருத்தை கேட்பதற்கான அவசியம் என்ன என்பதற்கான காரணம் விளக்கப்படவில்லை. எனவே, இதெல்லாம் ஒன்றிய பாஜ அரசின் விரக்தியையும், மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.