திருமலை: தெலங்கானாவில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த ஆளும் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு எதிர்த்து போட்டியிட்டவரை எம்எல்ஏவாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், கட்வாலா தொகுதி எம்எல்ஏ பண்டா கிருஷ்ணமோகன். 2018ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது சமர்ப்பித்த உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காக கிருஷ்ணமோகனுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.அருணா தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்த நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதில் தேர்தலின்போது போலி ஆவணங்கள் மூலம் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பித்ததற்காக பண்டா கிருஷ்ணமோகனுக்கு ஸ்ரீ3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதோடு 2018ம் ஆண்டு தேர்தலின்போது பெற்ற வெற்றி செல்லாது என்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.கே.அருணாவை கட்வாலா எம்.எல்.ஏ.வாக அறிவித்து உத்தரவிட்டது.
தெலங்கானா மாநிலத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ள நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பண்டா கிருஷ்ண மோகன் உச்சநீதிமன்றம் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.கே.அருணா தற்போது பாஜகவில் இணைந்து தேசிய துணை தலைவராக செயல்பட்டு வருகிறார்.