நியூயார்க்: சொத்து குறித்து பொய் தகவல் தெரிவித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ.3000 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் இடையே அதிபர் வேட்பாளருக்கான போட்டி கடுமையாக உள்ளது. இவர்களில் டிரம்ப்தான் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனது சொத்து மதிப்பை டிரம்ப் அதிகரித்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால், அவருக்கு ரூ.3000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்க டிரம்புக்கு 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப் முற்றிலும் மறுத்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.