சாத்தான்குளம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பெரியதாழை மீனவ பெண்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடினார். பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் காணொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். 100வது நிகழ்ச்சியாக கடந்த மாதம் பல்வேறு பகுதி மக்களிடம் உரையாடினார். இந்நிலையில் மனதின் குரல் 101வது நிகழ்ச்சியாக நேற்று பிரதமர் மோடி உரையாடினார். இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் மீனவ பெண்களுடன் பிரதமர் மோடி உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியதாழை சமூக நலக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார். அப்போது மீனவ பெண்களுக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புற வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பெருமிதத்துடன் கேட்டறிந்தார். மேலும் நீர் மேலாண்மை குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் உரையாடினார்.