சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்தது. இத்தேர்வை 12,037 பேர் எழுதினர். முதலில் இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த மாதம் 29ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சியின் உத்தேச அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு கடந்த 11ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வரும் நவம்பர் 4, 5ம் தேதிகளில் மெயின் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒரு தேர்வு ரிசல்ட் வெளியிட்டால், அதற்கான அடுத்த தேர்வு குறைந்த பட்சம் ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வுக்கு கூடுதலாக படிப்பது வழக்கம். ஆனால், தற்போது குறைந்த கால அவகாசமே, அதாவது 23 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற, சட்டப்படிப்பு முடித்தவர்களும், உரிய முறையில் வழக்கறிஞராக பதிவு செய்தவர்களும் பெரிதும் கவலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, மெயின் தேர்வுக்கு படிக்க போதிய அவகாசம் வழங்க ேவண்டும் என்றும் அவர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் முதல்நிலை தேர்வு வெளியிடுவதற்கு முன்ேப மெயின் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இதனால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.