சென்னை: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ‘‘மொபைல் முத்தம்மா’’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. கூட்டுறவு துறை சார்பில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கான டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாயவிலைக் கடைகளில், 562 கடைகளில் ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 26 கடைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எளிதில் டிஜிட்டல் பரிவர்த்தனை புரிந்து கொள்ளும் வகையில் ‘மொபைல் முத்தம்மா’ என்ற பெயரில் எப்படி பணம் இல்லாமல் மொபைல் மூலம் பொருட்களை வாங்கலாம் என ரேஷன் கடைகளில் விழிப்புணர்வு வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.