Thursday, May 16, 2024
Home » ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்: தேர்தலில் போட்டியிட ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா; தென்சென்னை கேட்டு அடம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்: தேர்தலில் போட்டியிட ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா; தென்சென்னை கேட்டு அடம்

by Karthik Yash

பாஜவின் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில் 2 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததால் 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2021ம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் பொறுப்பாக தமிழிசைக்கு புதுச்சேரி வழங்கப்பட்டது. இவர் இருமாநில பணிகளையும் கவனித்து வந்தார். தெலங்கானாவின் அப்போதைய முதல்வர் சந்திரசேகர ராவுடன் மோதல் போக்கு நீடித்ததால் புதுச்சேரியிலேயே தங்கிய தமிழிசை முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அவ்வப்போது தெலங்கானாவும் சென்று பணிகளை மேற்கொண்டார். இந்தநிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகின. அவர் புதுச்சேரியில் களமிறங்க விரும்புவதாக கூறப்பட்டது. இதை தமிழிசை மறுக்காமல் இருந்தார்.

இதனிடையே ஆளுநர் தமிழிசை தான் வகித்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் தமிழிசை தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி அல்லது தென்சென்னை ஏதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜ மேலிடத்தில் விருப்பம் தெரிவித்திருந்ததாக தெரிகிறது. ஆனால், நெல்லையில் நயினார் நாகேந்திரனும், குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் அல்லது விஜயதரணிக்கும், தென் சென்னையில் எச்.ராஜா அல்லது எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஒதுக்க பாஜ முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழிசைக்கு மீண்டும் தூத்துக்குடியே ஒதுக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவை களமிறக்க பாஜ திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த மழை வெள்ள பாதிப்புகளின்போது பாஜ எதுவுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி அங்கேயே தங்கி வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். இதனால் பாஜவுக்கு டெபாசிட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் என்பதால் மீண்டும் தமிழிசையை அங்கு களமிறக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழிசையோ தென்சென்னை தொகுதிதான் வேண்டும் என்று அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழிசை கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் தான் போட்டியிடுகிறேன். புதுவை தொகுதியில் போட்டி இல்லை. எந்த தொகுதி என்பது பாஜ தலைமை அறிவிக்கும். மக்கள் பணியில் ஈடுபடுவது தான் ஆர்வம் அதிகம்,’ என்றார்.

* போட்டியிட்ட 4 தேர்தல்களிலும் படுதோல்வி
தமிழிசை சவுந்தரராஜன் 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். இதில் 5,343 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதையடுத்து 2009 மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜ சார்பில் களம் கண்டார். இதில் 23,350 வாக்குகள் பெற்றார். மீண்டும் 2011 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியிலும் பாஜ சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 7,040 வாக்குகள் மட்டுமே பெற்றார். போட்டியிட அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்தார். இதையடுத்து, தமிழக பாஜவின் முதல் பெண் தலைவராக கடந்த 2014ம் ஆண்டு தமிழிசை நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு வரை பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜன், திடீரென 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட களம் இறக்கப்பட்டார். இந்த தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். இதிலும் தமிழிசைக்கு தோல்விதான். போட்டியிட்ட அனைத்து தேர்தலிகளிலும் தமிழிசைக்கு படுதோல்விதான் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

five + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi