Wednesday, May 15, 2024
Home » இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்..!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட்..!!

by Kalaivani Saravanan

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன் என்பவரும், அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கூடிய அதிகாரத்தை இழந்துவிட்டார். பொதுவாக அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். அவ்வாறு இருப்பின் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என்று வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ஒரு குற்றவழக்கில் ஒருவர் தண்டிக்கப்பட்டால் தவிர, அவர் அமைச்சராக நீடிப்பதற்கு எந்த தகுதி இழப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ எந்தவொரு தடையும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கை பொறுத்தவரை அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வழக்கானது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

17 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi