சிவகாசி : சிவகாசி பாஜ நிர்வாகி திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சத்யராஜ்(42). பாஜ விருதுநகர் மேற்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார். இவர் திருத்தங்கல் ஜவுளிக்கடை அதிபர் ஈஸ்வரனிடம் 5 ஏக்கர் நிலத்தை கிரயம் முடித்து தருவதாக ரூ.51 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்யராஜ் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனிற்கு சத்யராஜ் வந்தார். திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக தீயை அணைத்து காப்பாற்றப்பட்ட அவர் 25 சதவீத காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சத்யராஜ் கூறுகையில், ‘‘பண மோசடி செய்ததாக போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எனவே நியாயம் கிடைப்பதற்காக தீக்குளிக்க வந்தேன்’’ என்றார்.