பூந்தமல்லி: பூந்தமல்லியில் டிரங்க் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரிகள் கடைகளை பூட்டிவிட்டுச் சென்றனர். பின்னர், நேற்று காலை பனையாத்தம்மன் குட்டை பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்காக கடை உரிமையாளர்கள் வந்தனர். அப்போது மளிகை கடை, துணிக்கடை, கறிக்கடை என 3 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, அங்கு சுமார் ரூ.1 லட்சம் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார், கொள்ளை நடந்த கடைகளில் சோதனை செய்து, அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குரங்குத் தொப்பி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனது முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக கேமராவை மேல் நோக்கியவாறு திருப்பிவிட்டு கையில் வைத்திருந்த பெரிய இரும்பு ராடால் 3 கடைகளின் ஷட்டர்களில் இருந்த பூட்டுகளை உடைத்து கொள்ளையடித்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், அதே பகுதியில் உள்ள வேறு கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ள நபரின் உருவத்தை வைத்து, மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.