பொன்னேரி: பொன்னேரியில் 494 மாணவர்களுக்கு இலவச கைக்கிள்களை துரை சந்திரசேகர் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த விழாவிற்கு, பொன்னேரி நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசன், துணைத் தலைமையாசிரியர் சுரேஷ் , டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 158 மாணவர்கள், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 336 மாணவிகள் என மொத்தம் 494 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உமாபதி, நல்லசிவம், வில்சன், பாலாஜி, பிரபு, ஜெயசீலன் உள்ளிட்ட ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.