பொன்னேரி: பொன்னேரியில் உள்ள அடகுக் கடையில் சுமார் 2.5 கிலோ தங்க நகைகள் திருடு போனதில், கடை உரிமையாளரின் உறவினரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் கன்னியா லால் (54). இவர் கொரோனா காலத்தில் தனது உறவினர் மகன் சுரேஷ் யாஸ் (45) என்பவரை கடையை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தனது குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் பொன்னேரியில் உள்ள தனது கடைக்கு வந்து பார்த்தபோது கன்னியா லால் அதிர்ச்சி அடைந்தார். கடையில் அடகு வைத்த தங்க நகைகளில் சுமார் 2.5 கிலோ நகைகள் திருடு போனது அவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சுரேஷ் யாஸை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த கன்னியா லால் இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொன்னேரி போலீசில் புகார் அளித்தார். தொடர்து, பொன்னேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ராஜஸ்தானுக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த சுரேஷ் யாஸை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், பொன்னேரி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திருடு போன 2.5 கிலோ தங்கம் என்ன ஆனது, அதனை சுரேஷ் யாரிடமாவது விற்றுவிட்டாரா, இல்லையெனில் கன்னியா லால் சொந்த ஊருக்குச் சென்றபோது நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.