பொன்னேரி: பொன்னேரி அருகே, திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே சிறுவாக்கம், சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). விவசாயி. இவருக்கும் சோழவரம், ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன் தனலட்சுமிக்கு கர்ப்பம் கலைந்துவிட்டது. இதனால் கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளில் அவரை திட்டி வந்துள்ளனர். மேலும், தனலட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் தனலட்சுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாமியார் சிவகாமி அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்று முன்தினம் இரவு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தனலட்சுமியின் தாய் முத்துலட்சுமி, தனது உறவினர்களுடன் வந்து கதறி அழுதார். பின்னர் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முரளிகிருஷ்ணன், சிவகாமி, ரவிக்குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொன்னேரி போலீசில் முத்துலட்சுமி புகார் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், பொன்னேரி ஆர்டிஓவான சப்-கலெக்டர் வாகே சன்டேத் பல்வந்த் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினர் பொன்னேரி ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.