சென்னை: பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஜன.8ல் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள், வேலைக்காகவும் படிப்பிற்காகவும் இடம்பெயர்ந்த மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊர் சென்று கொண்டாடுவார்கள். கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாடினர். இதற்கான சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் வரும் ஜனவரி 15 முதல் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பர். இதன் காரணமாக, ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் பொதுமக்கள் எந்த சிரமமும் இன்றி பண்டிகைக்கு ஊருக்கு சென்று வர தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து ஜனவரி 8ல் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், ஏற்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும். சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை, பேருந்து நிலைய விவரங்கள் ஆலோசனைக்கு பிறகு வெளியாகும். சிறப்பு பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக 8ம் தேதியே அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.