மதுரை: நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் உள்ள காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த பகுதிகளில் வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 10ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கு அதிமுக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கியது. நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக. திராவிட கட்சிகளால் பயனில்லை என்றால் மாறி மாறி கூட்டணி வைப்பது ஏன்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு எடுக்கிறது பாமக. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.