Thursday, May 16, 2024
Home » அவன் உண்மையான புருஷனே இல்ல ; ஒரு வருஷமா நான்தான் வச்சுருக்கேன்… எனக்கு நாலாவது வேணாம்… அஞ்சாவதுதான் வேணும்! காவல் நிலையத்தில் வடிவேலின் ஏட்டு ஏகாம்பரம் அட்ராசிட்டி

அவன் உண்மையான புருஷனே இல்ல ; ஒரு வருஷமா நான்தான் வச்சுருக்கேன்… எனக்கு நாலாவது வேணாம்… அஞ்சாவதுதான் வேணும்! காவல் நிலையத்தில் வடிவேலின் ஏட்டு ஏகாம்பரம் அட்ராசிட்டி

by Karthik Yash

* பெரிய லிஸ்டு சொல்லி போலீசை கதிகலங்க வைத்த பெண்
* மிஸ்சிங் கேஸ் முடிக்க அவங்க பட்ட பாடு அய்யய்யோ…

சேலம்: நடிகர் வடிவேல் காமெடி என்றாலே, எல்லோருக்கும் ஒரு குதூகலம்தான். அதிலும் மருதமலை படத்தில் வரும் ஏட்டு ஏகாம்பரமும், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் 5 புருஷன் காமெடியும் பட்டாசு கிளப்பும். அதுபோல ஒரு சம்பவம், சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் நடந்துள்ளது. சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘கடந்த 28ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்காக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு மனைவியோடு வந்திருந்தேன். பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற மனைவியை காணவில்லை. அவர், எனது அம்மாவின் 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணத்தோடு மாயமாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறியிருந்தார். புகாரை விசாரித்த போலீசார், இளம்பெண் மாயம் என வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அப்பெண் மதுரையில் ஒரு கட்டிட தொழிலாளியோடு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையை மதுரைக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மீட்டு வந்தனர். பிறகு ஸ்டேஷனில் நடந்த விசாரணையில் தான், போலீசாரை அந்த இளம்பெண் கதி கலங்க வைத்து விட்டார். போலீசார், 26 வயதான அந்த இளம்பெண்ணிடம், உன் கணவனை விட்டு ஏன் ஓடிச் சென்றாய்? என விசாரித்தனர். அப்போது அந்த பெண், என்னை காணவில்லை என புகார் கொடுத்தவன் உண்மையான கணவனே இல்லை, என்னோட நாலாவது கணவன், ஒரு வருஷமாக அவனுக்கு அடைக்கலம் கொடுத்து கூட வச்சிருந்தேன், அவ்வளவுதான் என கூலாக கூறியிருக்கிறார்.

தொடர் விசாரணையில் கிடைத்த தகவல் பற்றி போலீசார் கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த அந்த இளம்பெண்ணுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துள்ளார். 3 குழந்தைகளும் கணவரிடம் வளர்கின்றனர். பிறகு கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் வேறு வேறு நபர்களுடன் பழகி வாழ்ந்திருக்கிறார். கடைசியாக கேரள மாநிலம் பாலக்காட்டில் வேலை பார்த்தபோது, கடலூரை சேர்ந்தவருடன் பழகி அவருடன் ஓராண்டுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்துள்ளார். கடந்த மாதத்தில் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் கட்டுமான பணிக்கு இருவரும் வேலைக்கு வந்துள்ளனர்.

அப்போது மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், சம்பவத்தன்று நலாவதாக வாழ்ந்தவரை அம்போனு ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விட்டு, மதுரைக்காரரோடு சென்றுள்ளார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் நபர் என்பதால், இருவரும் ஒன்றாக அங்கு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தியுள்ளனர். மனைவி மாயம், நகை, பணத்துடன் சென்றுவிட்டார் என புகார் கொடுத்ததால், அப்பெண்ணை பிடித்து வந்து விசாரிக்க வேண்டியதாயிற்று. 20 பவுன் நகை, பணம் எதையும் அவர் எடுத்துச் செல்லவில்லை எனத்தெரியவந்துள்ளது. கடைசியாக அந்த இளம்பெண், தன்னை காணவில்லை என புகார் கொடுத்த நாலாவது ஆளோட செல்ல முடியாது என கறாராக கூறிவிட்டார்.

இனி மதுரைக்காரரோடதான் வாழ்வேன் என்றும் அடம் பிடித்துள்ளார். அதேநேரம் புகார் கொடுத்த 4வது நபர், எப்படியாவது என்னோட அனுப்பி வையுங்க என கெஞ்சினார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறினர். எப்படியாவது மிஸ்சிங் கேசை முடித்து விட வேண்டும் என அந்த இளம்பெண்ணை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு அங்கு தங்கிய இளம்பெண்ணை, நேற்று காலை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு மனைவியை காணவில்லை என புகார் கொடுத்த அந்த வாலிபர் வரவில்லை. இறுதியில் தனது விருப்பப்படி செல்வதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அதனால் நீதிமன்றம், வழக்கை முடித்து அப்பெண்ணை அனுப்பி வைத்தது. வடிவேலின் ஏட்டு ஏகாம்பரம் காமெடி போல் நடந்த இச்சம்பவம் சேலம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

seventeen − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi