மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டுக்குட்பட்ட குள்ளரங்கன்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு கோகிலா (38) என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர். இதில் 2வது மகன் ரமணிச்சந்திரன் (21) பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐடி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ரமணிச்சந்திரன் கடந்த 18ம் தேதி அந்த பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்து தருவது குறித்து 6வது வார்டு கவுன்சிலர் கவின்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது செல்போனை அவரது மனைவி எடுத்து பேசியுள்ளார். இந்நிலையில் கவுன்சிலர் கவின்குமார் மற்றும் 2 பேருடன் ரமணிசந்திரனின் வீட்டிற்கு சென்று, செல்போனில் எனது மனைவியிடம் ஏன் பேசினாய்?
எனக் கேட்டு, ரமணிச்சந்திரன் மற்றும் அவரது தாய் கோகிலா, தந்தை சண்முகம் ஆகிய 3 பேரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கோகிலா ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் அரச்சலூர் போலீசார் கவுன்சிலரும் மொடக்குறிச்சி ஒன்றிய பாஜ இளைஞரணி துணை அமைப்பாளருமான கவின்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.