புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு திறனில் இந்தியா முன்னிலை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். பொக்ரான் அணு சோதனையின் 25 வது ஆண்டு நிறைவு தினத்தை குறிக்கும் வகையில் தேசிய தொழில்நுட்ப தின விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: எனது அரசு தொழில்நுட்பத்தை அதிகாரமளிப்பதற்கும், சமூக நீதியை உறுதி செய்வதற்கும் ஒரு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடத்தப்பட்ட பொக்ரான் அணு ஆயுத சோதனைகள் இந்தியாவின் அறிவியல் திறன்களை நிரூபிக்க உதவியது மட்டுமின்றி, உலக அளவில் நமது மதிப்பை உயர்த்தியது.
அடல்ஜியின் வார்த்தைகளில் கூறுவது என்றால்,’ நாங்கள் எங்கள் பயணத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை, எங்கள் வழியில் வரும் எந்தவொரு சவாலுக்கும் ஒருபோதும் சரணடையவில்லை’ என்பதுதான். இந்தியா முழுமையான, 360 டிகிரி அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. தொழில்நுட்பத்தை தேசத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாக இந்தியா கருதுகிறது. அதை ஆட்சி அதிகாரத்திற்காக பயன்படுத்தவில்லை. கோவின் போர்டல் அல்லது விவசாயிகளுக்கான டிஜிட்டல் சந்தை என எதுவாக இருந்தாலும், அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பிறந்தது முதல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளன. எனவே சுகாதாரத் துறை, டிரோன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.