புதுடெல்லி: பாஜ எம்பி பிரிஷ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கில் 18 வயதுக்கு கீழுள்ள மல்யுத்த வீராங்கனையின் வாக்குமூலம் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உட்பட 7 வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது பற்றி விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையை வெளியிடக்கோரி மல்யுத்த வீரர்,வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இளம் வீராங்கனையின் குற்றச்சாட்டுகள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கு மீதி உள்ள வீராங்கனைகள் அளித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் நிலை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யும்படி டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனையின் வாக்குமூலம் நேற்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.