புதுடெல்லி: ஒன்றிய அரசு ராணுவத்தை அரசியல் ரீதியாக தேர்தலுக்கு பயன்படுத்துவதாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அரசின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் சுமார் 822 இடங்களில் செல்பீ பாயிண்டுக்களை அமைக்கும்படி ராணுவத்தை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில்,‘‘தேசத்தை காக்கும் நமது இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களின் புகழை பயன்படுத்தி மோடி ஜீ தன்னை தானே உயர்த்திக்கொள்கிறார். ராணுவத்தை தேர்தலுக்காக அரசியல் ரீதியாக பிரதமர் பயன்படுத்தியதன் மூலமாக கடந்த 75 ஆண்டுகளில் நடக்காத ஒரு செயலை மோடி அரசு செய்துள்ளது. அரசின் திட்டங்களை ஊக்குவிக்க செல்பீ பாயிண்டுகளை அமைக்கும்படி மோடி அரசு ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம் குறித்த கதைகளுக்கு மாறாக பிரதமர் மோடியின் உருவம், சிலை மற்றும் அவரது திட்டங்கள் புகழப்பட்டுள்ளது. வீரர்களின் புகழை பணயம் வைத்து ஆளும் கட்சி தனது கண்ணியத்தை காயப்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.