சென்னை: பிரதமர் மோடி வருவதையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தட விதித்துள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். அப்போது தி.நகரில் ‘ரோடு ஷோ’ நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ெசன்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் டெலியில் இருந்து வந்த பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடைபெறும் பகுதியில் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி யாரேனும் தி.நகர் பகுதியில் டிரோன்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.