Sunday, June 2, 2024
Home » பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தால் மக்களவை தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் நீடிப்பு

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தால் மக்களவை தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் நீடிப்பு

by Ranjith

*2014ல் மார்ச் 5ல், 2019ல் மார்ச் 10ல் அறிவிப்பு வந்தது

* இப்போது வரும் 15ல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தால், மக்களவை தேர்தல் அட்டவணை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது. வரும் 15ம் தேதி தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

பொதுவாக மக்களவை தேர்தல்கள் ஏப்ரல், மே மாதத்தில் நடத்தப்பட்டு மே இறுதியில் முடிவு அறிவிக்கப்படும். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை தேர்தல் நடத்தப்பட்டது. மே 16ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டைப் பொறுத்த வரையில் மார்ச் 10ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டமாக தேர்தல் நடத்தி, மே 23ம் தேதி முடிவுகள் வெளியாகின.

ஆனால் இம்முறை தேர்தல் தேதி அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் வருகிறார். கடந்த 2014, 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ, இம்முறை 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கிறது. இதனால், தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தினமும் 3, 4 மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

இன்று முதல் 4 நாட்களுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக உள்ளன. ஒன்றிய அமைச்சகங்களும் பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, வரும் 13ம் தேதிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமும் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. அன்று மாலை, பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.

இதுவே தற்போதைய ஆட்சியில் நடக்கும் கடைசி அமைச்சரவை கூட்டமாக இருக்கும். இதில், தேர்தலில் வாக்குகளை கவர காஸ் விலை குறைப்பு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தி வருகிறது. கடைசியாக வரும் 13ம் தேதி தேர்தல் அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரில் ஆய்வை நடத்தி நிறைவு செய்ய உள்ளனர்.

பின்னர் டெல்லியில் 14ம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இதுமட்டுமின்றி, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த பணியும் வரும் 13ம் தேதியுடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வரும் 14 அல்லது 15ம் தேதி மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 15ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை போலவே இம்முறையும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் எனவும், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீடுகளை முடித்து வருவதால், மக்களவை தேர்தலுக்கான தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi