புதுடெல்லி: சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். தற்போது தென்னாப்பிரிக்கா, கிரீஸ் சுற்றுப் பயணத்தில் உள்ள அவர் நாடு திரும்பியதும் நாளை மாலை 5.35 மணிக்கு பெங்களூருவுக்கு வருகிறார். விமான நிலையத்தில் 30 நிமிடங்கள் ஓய்வு எடுக்கிறார். அதை தொடர்ந்து கார் மூலம் பெங்களூரு பீன்யாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு (இஸ்ரோ) வருகை தரும் பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்பட இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார். பின் 90 நிமிடங்கள் விஞ்ஞானிகளுடன் சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள், நிலவின் தென் துருவத்தில் தற்போது நடந்து வரும் ஆய்வு உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.