சென்னை: சென்னை கிண்டியில் இந்தியாவிலேயே முதன்முறையாக பிரத்யேகமாக முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையான தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், திறந்து வைத்தார். ன்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: 007ம் ஆண்டு தொடங்கி பல்வேறு நிலைகளைக் கடந்து கட்டிடப்பணிகள் நிறைவுற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பின் பிரதமரால் மக்களின் பயன்பாட்டிற்காக முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
200 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை 276 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் 8.64 ஏக்கர் நிலப்பரப்பு ஆர்ஜிதம் செய்யப்பட்டு இப்பணிகள் முடிவுற்று இம்மருத்துவமனை தற்போது திறக்கப்படுகிறது. இம்மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சைகள் வயது முதிர்ந்தவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. தினசரி இயங்கும் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படவுள்ளது.
சிறப்பு சிகிச்சை பிரிவுகள், பிரத்யேக நோய்களான அறிவுத்திறன் குறைபாடு, நிலை தடுமாறி விழுதல், எலும்பு தேய்மானம், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமை, நாட்பட்ட வலி முதலியவற்றிற்கான நோய்கள் கண்டறிதல், புனர்வாழ்வு சிகிச்சைகள் ஆகியவை இம்மருத்துவமனையில் 24 மணிநேரமும் அளிக்கப்படவுள்ளன. சிறப்பு பிரிவுகளான இதயநோய் மருத்துவம், சிறுநீரகம், மூளை நரம்பியல், வயிறு மற்றும் சிறுகுடல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு மருத்துவம், அரசின் ஆயுஷ் மூலம் வழங்கப்படும் சேவைகளும் இம்மருத்துவமனையில் கிடைக்கபெற உள்ளன.
பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, கண் காது மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகள், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் முதலான முக்கிய சேவைகளும் முதியோர்களுக்கு கிடைக்கும். இப்போதே ரூ,1 கோடி மதிப்பிலான அவசர அவசிய மருந்துகள் கையிருப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 40 தீவிர சிகிச்சை படுக்கைகள், 20 கட்டணப்படுக்கைகளும் உண்டு. கட்டண அறைகளுக்கு குறைந்த அளவிலான வாடகையாக ரூ,900 என்கிற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் 20 அறைகளும் பயன்பாட்டிற்கு வருகிறது.
முதியோரைப் பொறுத்தவரை மருத்துவத்திற்கு வருபவர்கள் பார்வை திறன் குறைபாடு, ஞாபக சக்தி போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கான வருபவர்கள் 24 மணிநேரமும் படுக்கை அறைகளில் தங்குவது அவசியமற்ற ஒன்று என்பதாலே அவர்களுக்காக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூலகம் மட்டுமல்லாமல் அவர்கள் ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில் கேரம் போர்டு, செஸ் பலகைகள், பல்லாங்குழி போன்ற தமிழர்களின் விளையாட்டுகள் தொடர்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரத்யேக வயது மூத்தவர்களுக்கான மருத்துவமனை பயன்பாட்டிற்கு வருகிறது என்பது தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிறப்பு.