களக்காடு: நாங்குநேரி அருகே 12ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய மற்றொரு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு கோவைகுளத்தை சேர்ந்த 16 வயது மாணவர் மருதகுளத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18ம்தேதி அதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மூன்றடைப்பை சேர்ந்த மாணவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இதைப்பார்த்த கோவைகுளம் மாணவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். இதையறிந்த மூன்றடைப்பு மாணவர், நேற்று பள்ளிக்கு வந்த கோவைகுளத்தை சேர்ந்த மாணவரிடம் என்னை ஏன் அவதூறாக பேசினாய்? என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் மாலையில் கோவைகுளம் மாணவர் மருதகுளத்தில் உள்ள மிட்டாய் கடை அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மூன்றடைப்பு மாணவர், கோவைகுளம் மாணவரை கத்தியால்குத்தினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்றடைப்பு மாணவரை தேடி வருகின்றனர்.