பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஆய்வு செய்தார். விபத்து அவசர சிகிச்சை பிரிவு, சிடி ஸ்கேன் பிரிவு, யோகா மற்றும் சித்தா பிரிவு, பெண்கள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பகுதி, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட வார்டு, ரத்த வங்கி, சமையல் கூடம், டயாலிசிஸ் பிரிவு, மகப்பேறு வார்டு, பச்சிளம் குழந்தை வார்டு, மருந்தகம், ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவை பார்வையிட்டார்.
இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவ கட்டிட பணிகளை பார்வையிட்டு, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும் சித்தா பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டி தரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டி 14, 17 மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.