பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பெண் நில அளவர், பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் டிஎஸ்பி அலுவலகத்திற்கு இரவில் பேரணியாக சென்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் பெரியகோட்டை சரக நில அலுவலராக பணிபுரிந்து வரும் பவ்யா மற்றும் பெரியகோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் மாரியம்மாள் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று பெரியகோட்டையில் நில அளவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குவந்த அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் உள்ளிட்டோர் அவர்களை பணி செய்ய விடாமல் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் முருகானந்தத்தை கைது செய்ய வலியுறுத்தி பட்டுக்கோட்டை தாலுகாவில் பணிபுரியும் சரக நில அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பெண் அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் 3வது நாளாக தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் பேரணியாக புறப்பட்ட அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பிய வாரே டிஎஸ்பி அலுவலகத்தை அடைந்து செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டபடி முழக்கமிட்டனர். செல்போன் மூலம் போராட்டக்காரர்களிடம் பேசிய தஞ்சை ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்கின்றோம் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு களைந்து சென்றனர்.