சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டினம்பாக்கம் முள்ளி மாநகரில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும் பூக்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். பட்டினப்பாக்கம் மாதா கோயில் அருகே இருந்த கிறிஸ்தவ மக்கள் ஜெயவர்தனை மாதா கோயிலுக்கு அழைத்து சென்று மெழுகுவர்த்தி ஏற்றி, வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். அங்கிருந்து மீன் மார்க்கெட்டுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர், லஸ் சர்ச் சாலையில் தென் சென்னை நாடாளுமன்ற தலைமை தேர்தல் பணிமனையை தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா திறந்து வைத்தார். அதன் பின்னர் அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை டாக்டர் ஜெயவர்தன் தாக்கல் செய்தார். அவருடன் அவரது தாயார் ஜெயகுமாரி, தேர்தல் பொறுப்பாளர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் வி.என்.ரவி, எம்.கே.அசோக், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், கூட்டணி கட்சிகளான தேமுதிக மாவட்ட செயலாளர் பழனி மற்றும் ஆனந்தன், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, பெருந்தலைவர் மக்கள் கட்சி புரட்சிபாரதம் மற்றும் தோழமை கட்சியை சார்ந்த தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.