தண்டையார்பேட்டை: பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியின் டிவிஷனல் மேனேஜரான சசிகலா (51) என்பவர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், எங்களுடைய வங்கியின் ஹார்மோனின் தெரு, மண்ணடி தம்பு செட்டி தெரு, பிராட்வே ரோடு ஆகிய 3 கிளைகளில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் யமுனா (36).
இவர் தன் கணவர் ராமச்சந்திரன் என்பவர் பெயரில் ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், சகோதரரான பால விக்னேஷ் என்பவர் பெயரில் ரூ.32 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலும், மாரியப்பன் என்பவர் பெயரில் ரூ.11 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.62 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான போலி நகைகளை அடகு வைத்து ஏமாற்றியது தெரியவந்தது.
எனவே யமுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யமுனா கடந்த ஒரு வார காலமாக விடுப்பு எடுத்துக் கொண்டு வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.