Friday, May 10, 2024
Home » மன்னிப்பு கேட்ட பதஞ்சலி நிறுவனம்.. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் உறுதி!!

மன்னிப்பு கேட்ட பதஞ்சலி நிறுவனம்.. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் உறுதி!!

by Porselvi

டெல்லி : பதஞ்சலி மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்காத பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் நோட்டீஸிற்கு பதில் அளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். மேலும் மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்த விவகாரத்தில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டது. விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்தது. இதனிடையே ஏப்ரல் 2ம் தேதி பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

fourteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi