சென்னை: சென்னை சாலிகிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்து பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் தெரிவித்தார். நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று விஜயகாந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.