மீனம்பாக்கம்: கொழும்பில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 8.40 மணியளவில் சென்னைக்கு வந்தடையும். அதுபோன்று இன்று காலை கொழும்பில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானத்தில் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், சென்னையில் இருந்து காலை 9.40 மணியளவில் புறப்பட்டு, காலை 11 மணியளவில் கொழும்பு நகரை சென்றடையும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானமும் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
இந்த 2 விமானங்களிலும் பயணம் செய்வதற்கு ஒருசில பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்களுக்கு முன்கூட்டியே குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒருசில பயணிகளின் டிக்கெட்டுகள் மாற்றப்பட்டு, மாற்று விமானங்களில் கொழும்புக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றன என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.