சென்னை; தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நாளை (17ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் நாளை காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 வரை ரத்து செய்துள்ளது.
இந்த நேரத்தில் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகளை இயக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.