சென்னை : நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ்: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. பட்டியலின இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: திருநெல்வேலி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய இரு பட்டியலின இளைஞர்களை அப்பகுதி வழியாக வந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் பெய்து, தாக்கி, மிரட்டிப் பணம் மற்றும் கைபேசிகளைப் பறித்துச் சென்றதாகவும் தகவல்கள் வருகின்றன.குற்றவாளிகள் ஆறு பேரை காவல்துறை உடனடியாகக் கைது செய்துள்ளது. ஒரு சிலரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது. மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காக்க விரும்பும் ஒவ்வொருவரையும் இச்செயல் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): நெல்லை மாநகரில் உள்ள மணிமூர்த்திபுரம் தாமரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியை சேர்ந்த 6 பேர் வழி மறித்து மிரட்டி, அவர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு, நிர்வாணமாக்கி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
திருமாவளவன் (விசிக): நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து அலைபேசிகள், இருசக்கர வண்டி மற்றும் பணமெடுக்கும் ஏடிஎம் அட்டை போன்றவற்றைப் பறித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆடையில்லாமலேயே அவர்கள் அங்கிருந்து தப்பித்து வீடுவந்து சேர்ந்துள்ளனர். குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை: குற்றவாளிகளை காவல்துறை கைது செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க, மனித சமூகத்தில் வாழத் தகுதியற்ற வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.