தண்டையார்பேட்டை: சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக நாடாளுமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கழக பொறுப்பாளர்கள் மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டனர். கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், நாற்பதற்கும் 40 என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் கார்த்திக், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் செய்தியாளரிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மக்கள் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்து 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். திமுக கூட்டணியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி கொடுத்தால் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.