தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எடப்பாடி பழனிசாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என எங்கள் கட்சியினர் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். பழனிசாமி பச்சோந்தி மாதிரி. அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம் என்பார். இப்போது வேண்டும் என்பார். ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை.
ஒன்றிய அரசு தங்களுக்கு அறுதி பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை பேசுவது காட்டுமிராண்டித்தனம். சனாதனம் அனைத்து மதங்களிலும் உள்ளது. காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. என் மீதான அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடந்து கொள்வேன். என் மீது தவறு இல்லை என்பதால் அபராதம் கட்டக்கூடாது என போராடி வருகிறேன். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.