Friday, May 17, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

by Mahaprabhu

ஊட்டி: நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளும் நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மார்ச் மாதம் துவங்கியவுடன் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனை சமாளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இதுதவிர வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் இம்மாதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தலின்போது பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வரும் வழியில் உள்ள கூடலூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வாகனங்களிலும் சோதனை மேற்கொள்கின்றனர். மேலும், சுற்றுலாவுக்காக பயணிகள் எடுத்து வரும் பணமும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தால் அதனை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வாங்க சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இந்த தொல்லைகளில் இருந்து தப்பிக்க பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவதை தவிர்த்து விட்டனர். கடந்த மூன்று நாட்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

You may also like

Leave a Comment

7 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi