காஞ்சிபுரம் : பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. நில எடுப்பு பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்கான அலுவலகங்கள் மற்றும் நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நில எடுப்பு தொடர்பான முதல் நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 2.77.76 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நிலம் கொடுத்த உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள வெவ்வேறு மண்டலங்களாக பிரித்து தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் படி இந்த அறிவிப்பானது சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி நேரடியாக விசாரணை நடைபெறும் என்று அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.