காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க கள ஆய்வு மேற்கொள்ள வந்த, ஐஐடி குழுவினரை தடுத்து கள ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களை இணைத்து, 4,750 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் 346வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிராமசபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில், ஐஐடி குழுவினர் கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் கள ஆய்வுக்கு வருகை தரும் போராசிரியர் மச்சநாதன் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆய்வு குழுவினர் ஆய்வு செய்வதையறிந்து கிராம மக்கள், ஆவேசமடைந்து ஆய்வு குழு பணிகளை தடுத்து நிறுத்த ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பரந்தூர் மதுரமங்கலத்தில் கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனிடையே ஊர்வலமாக சென்று கிராம மக்களுக்கும், போலீசருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர். பேருந்தில் ஏற்றி வல்லக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தையொட்டி வழிநெடுக்கிலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.