சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலாளராக பணியாற்றி வரும் கே.பணீந்திர ரெட்டி, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பதிவாளர் சண்முகசுந்தரம், போக்குவரத்து துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை கமிஷனராக பணியாற்றி வரும் எல்.நிர்மல்ராஜ், புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் கனிமவளத்துறை கமிஷனராக பணியாற்றி வரும் ஜெயகாந்தன், சமூகநலம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
சமூகநலம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை இயக்குனராக பணியாற்றி வந்த டி.ரத்னா, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) பணியாற்றி வரும் கே.ஜே.பீரவின்குமார், மதுரை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வரும் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டராக(வளர்ச்சி) பணியாற்றி வரும் எஸ்.பாலசந்தர், சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.