கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று அதிகாலை3.30 மணியளவில் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. தோஹா வழியாக செல்லும் இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர். அப்போது, பயணி ஒருவர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார்.
இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு விமானத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் புரளி கிளப்பியவரிடம் விசாரித்த போது, அவரது தந்தை விமான நிலைய அதிகாரிகளிடம் மருத்துவ அறிக்கை ஒன்றை காண்பித்தார். அதில் புரளி கிளப்பியவர், மனநல சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.