Wednesday, May 29, 2024
Home » திருவாலங்காடு, மீஞ்சூர் கோயில்களில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருவாலங்காடு, மீஞ்சூர் கோயில்களில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

by Ranjith

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பங்குனி உத்திரதிருவிழா நேற்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின், 7ம் நாளான மார்ச் 21ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து, மார்ச் 22ம் தேதி இரவு 9 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 24ம் தேதி காலை 7 மணிக்கு நடராஜர் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும் நடைப்பெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.ஸ்ரீதரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

பொன்னேரி: மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகின்ற 28ம் தேதி வரை 13 நாட்கள் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்களும் சிம்ம வாகனம், சூரிய பிரபை, பூத வாகனம், நாக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிவபெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இதில், முக்கிய விழாவாக திருத்தேராட்டம் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது. 24ம் தேதி திருக்கல்யாண வைபவமும் 28ம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் நிறைவு விழா நடைபெறுகிறது. கோயில் கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். இந்த கோயில் அறங்காவலர் அருண் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த கொடியேற்று விழாவில் விழா குழுவினர் அனைத்து கட்சி பிரமுகர்கள், அறநிலைத்துறை கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

14 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi