சென்னை: கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் ரியாஸ் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.