பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோடமைன்-பி புற்றுநோயை உண்டாக்க வல்லது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, பஞ்சு மிட்டாய் விற்பனை சமீபத்தில் புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது. சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன்-பி ரசாயனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, தமிழக அரசு கடந்த மாதம் தடை விதித்தது.
இந்நிலையில், தற்போது பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ரோடமைன்-பிக்கு கர்நாடக சுகாதாரத் துறை இன்று தடை விதித்தது. ரோடமைன்-பி என்பது உணவுக்கு தூக்கலான வண்ணத்தை கொடுக்கும் ஒரு இரசாயனமாகும். ரோடமைன்-பி மற்றும் அந்த இரசாயனம் கலந்த உணவு பொருட்களுக்கு எதிராக ஏற்கனவே சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி சாயம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் வண்ணக் கலவையுடன் கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் கர்நாடகா சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.