ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறையில் இருந்து கடந்த ஜன.16ம் தேதி, மீன் பிடிக்க சென்ற பாம்பன் மீனவர்கள் 18 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனையடுத்து இவர்கள் மீது இலங்கை கடல் தொழில் நீரியல் வளத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமன்னார் நீதிமன்றம் மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பாம்பன் மீனவர்கள் 18 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். 14 நாட்கள் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களும் நேற்று தலைமன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை செய்த நீதிபதி, பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட 18 மீனவர்களும் ஒரு சில தினங்களில் பாம்பன் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.